Tuesday, October 27, 2015

தடம் பதித்த நூல்கள்: இந்திய விடுதலைக்கு முந்தைய நாட்கள்


ஆங்கிலத்தில் ‘Freedom at Midnight’ என்ற பெயரில், பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேப்பியர் மற்றும் அமெரிக்க எழுத்தாளர் லேரி காலின்ஸ் ஆகிய இருவரின் படைப்பாக 1975-ல் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

இந்திய விடுதலையின் முன்னும் பின்னும் நெருக்கத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பாக வெளிவந்த இந்த வரலாற்று நூல் உலகம் முழுவதும் அதிகமாய் விற்பனையான நூல்களில் ஒன்றாக இருக்கிறது.

தமிழில் 2001-ல் இதன் முதல் பதிப்பு வெளியாகி, 2009-க்குள் 5 பதிப்புகள் வெளிவந்து, தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் அதிகமாய் விற்கப்படும் நூல்களின் வரிசையில் இந்த நூல் இடம் பிடித்துள்ளது.

இந்த நூலின் கதாநாயகரான காந்தி தனது பணியை முடித்த பின்னர் கொல்லப்பட்டார். இன்னொரு முக்கியமான தலைவரான மவுண்ட்பேட்டனும் பிற்காலத்தில் கொல்லப்பட்டார்.

இந்த நூலைப் படித்த பிறகு, இந்திய வரலாறு குறித்த நமது கருத்துக்களை நாம் மறுபரிசீலனை செய்யவேண்டியுள்ளது. இங்கிலாந்தின் ஒரு தனியார் நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனி 1600- ல் உருவாகி சில ஆண்டுகளில் இந்தியாவுக்குள் நுழைந்தது. அது நாடு பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதை ஆரம்பத்தில் இங்கிலாந்து அரசு ஆதரிக்கவில்லை.

இந்தியாவைத் துண்டாடக் கூடாது, அப்படி நடந்தால் அது இந்து - முஸ்லிம் கலவரத்தை உண்டாக்கும் என்று கருதியதால், வைஸ்ராய் மவுண்ட் பேட்டனும் பிரிவினையைத் தடுக்க முயற்சித்தார்.

புதிய இந்தியா குறித்த நேருவின் கனவோடு காந்தி எங்கே, எவ்விதம் முரண்பட்டார்? ஜின்னாவுக்குக் காசநோய் என்பது முன்பே தெரிந்திருந்தால், பிரிவினையைத் தவிர்த்திருக்கலாம் என்று மவுண்ட்பேட்டன் கூறியது சரியா? பிரிவினையைக் கடைசி வரை ஏற்றுக்கொள்ளாத காந்தி நாடு விடுதலை அடைவதற்கு முன்பேயும் பின்னர் அமைந்த புதிய அரசிடமிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டது ஏன்? 565 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய இளவரசர்கள் சபையின் பங்கு என்ன? காஷ்மீரில் நடந்தது என்ன? வகுப்புக் கலவரங்கள் எப்படி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன? அதில் காந்திக்கும் மவுண்ட்பேட்டனுக்கும் என்ன பங்கு?

இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இந்த நூல் விடை தருகிறது.


நன்றி :-தி இந்து

No comments:

Post a Comment